Close

கற்பகம் டெக் பார்க்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செப்.15-ல் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து 25 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, 15.09.2026 அன்று மதுக்கரை வட்டாரம், எச்சனாரி கற்பகம் டெக் பார்க், (கற்பகம் பல்கலைக்கழகம் அருகில்), PY. மஹால் அருகில், எச்சனாரி–பொள்ளாச்சி மெயின் ரோடு, கோயம்புத்தூர்–641021 பகுதியில், காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், இலவச அறுவை சிகிச்சைக்கு பயனாளிகளைத் தேர்வு செய்தல், உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடன் உதவி, பேருந்து அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

மேலும், ஆதார் அட்டை பதிவு மற்றும் திருத்தங்கள், குடும்ப அட்டையில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளும் இம்முகாமில் வழங்கப்படுகின்றன.

எனவே, மதுக்கரை வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மட்டும் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.