பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு கடன் திட்டங்கள் – ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தனிநபர் கடன், குழுக் கடன், கறவை மாடு கடன் மற்றும் வெளிநாட்டு உயர்கல்விக்கான கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தகுதியுடையவர்களுக்கு தனிநபர் கடனாக அதிகபட்சம் ரூ.25 இலட்சம் வரையும், சுய உதவிக்குழுக்களுக்கு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1.25 இலட்சம் வரையும், குழுவிற்கு அதிகபட்சம் ரூ.25 இலட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. கறவை மாடு வாங்குவதற்கும் தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் தகுதியுடைய மாணவ, மாணவியர்களுக்கு ரூ.25 இலட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம். தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து இத்திட்டங்களின் மூலம் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.